search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் சோதனை"

    • பி.டி.ஓ. உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள 16 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
    • கைதான டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடக மாநிலத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் நோக்கில் ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தா குழுவினர் இன்று காலை மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அலுவலகங்கள், வீடுகள் உள்பட 60 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். 100-க்கும் மேற்பட்ட லோக் ஆயுக்தா அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனைக்கு 13 சூப்பிரண்டுகள், 12 துணை சூப்பிரண்டுகள் தலைமை தாங்கி உள்ளனர்.

    இதில் பி.டி.ஓ. உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள 16 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதுபோல் பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டில் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் பீன்யா போலீஸ் நிலையம் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த சேத்தன் என்பவர் கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டார். அதற்கு போலீசார் 2 லட்சம் ரூபாய் லஞ்சம் தருமாறு அவரிடம் கேட்டனர்.

    இதையடுத்து பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டில் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் வைத்து உதவி கமிஷனர் ஜீப் டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோர் சேத்தனிடம் இருந்து முன்பணமாக ரூ.50,000 வாங்கினார்கள். அப்போது அங்கு மறைந்திருந்த லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணா தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். கைதான டிரைவர் நாகராஜ், ஏட்டு கங்கஹனுமையா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோலார் மாவட்டம் பங்கராபேட் தாலுகாவின் ஜே.குல்லஹள்ளி கிராம பஞ்சாயத்தில் பஞ்சாயத்து செயலாளர் கோவிந்தப்பா குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த முனியப்பா என்பவரிடம் பஞ்சாயத்தில் கணக்கு தொடங்க ரூ. 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். முனியப்பா முதலில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்த அவர் மீதி பணம் ரூ.2 ஆயிரத்தை கோவிந்தப்பாவிடம் கொடுத்துக் கொண்டிருந்தபோது லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு உமேஷ் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதேபோல் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்ட பள்ளாப்பூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையாளர் வீரண்ணா விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது லோக் ஆயுக்தா வலையில் சிக்கினார். 3 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்வதற்காக விவசாயியிடம் லஞ்சம் வாங்கும்போது அவர் பிடிபட்டார். அப்போது அங்கு இருந்த இடைத்தரகர் சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பெங்களூரு, உத்தர கன்னடா, பிதர், ராமநகரா, கார்வார், சன்னபட்னா உள்ளிட்ட 60 இடங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம், ஆவணங்கள், சட்ட விரோதமாக வாங்கப்பட்ட சொத்துக்கள் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகிறது.

    • ஷவர்மா சாப்பிட்ட பலரும் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • திருவள்ளூர் நகரில் செயல்பட்டு வரும் பாஸ்ட் புட் உணவகங்களில் திடீர் சோதனையிட்டனர்.

    திருவள்ளூர்:

    நாமக்கல் மாவட்டத்தில் உணவகம் ஒன்றில், 'ஷவர்மா' சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 'ஷவர்மா' சாப்பிட்ட பலரும் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் திருவள்ளூர் நகராட்சி சுகாதார துறையினர் திருவள்ளூர் நகரில் செயல்பட்டு வரும் பாஸ்ட் புட் உணவகங்களில் திடீர் சோதனையிட்டனர்.

    ஜெ.என்.சாலை, சி.வி. நாயுடு சாலை உள்ளிட்ட 'ஷவர்மா' கடையில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சிவசங்கரன் மற்றும் திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சோதனை நடத்தினர்.

    இதில் ஒரு கடைக்கு நகராட்சியின் அனுமதி பெறவில்லை என்று கூறி சீல் வைத்தனர். மேலும் மூன்று கடைகளுக்கு நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    கடையில் உள்ள இறைச்சியினை உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசங்கர் சோதனை செய்ததில் அதில் அளவுக்கு மீறி கலர் சேர்த்தும், ஏற்கனவே வேக வைக்கப்பட்ட இறைச்சியினை குளிர்சாதன பெட்டியில் வைத்ததும் கடையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது தெரிந்தது. இதைத்தொடர்ந்து 3 கடைகளுக்கும் 'நோட்டீஸ்' அளித்து ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மேலும் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பாஸ்ட் புட் உணவகம், 'ஷவர்மா' கடைகளில் சோதனை நடைபெறும் என உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் நகராட்சி சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், வாலாஜாபாத், உத்திரமேரூர், உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 55 கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    ஷவர்மா மற்றும் அசைவ உணவகங்களில் நடத்திய திடீர் சோதனையில் 28 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் மற்றும் கெட்டுப்போன உணவு வகைகளை பறிமுதல் செய்தனர். 23 உணவகங்களில் உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. 3 உணவகங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • பிளாஸ்டிக் கவர்கள், காலாவதியான தின்பண்டங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர
    • அபராதம் விதித்து எச்சரிக்கை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில், வாணியம்பாடியில் நகராட்சி ஆணையா ளர் சதீஷ்குமார் தலைமையில், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் செந்தில்குமார். சரவணன் மற்றும் சுகாதார பணியாளர்கள் பஜார் வீதி, முகமது அலி பஜார், ஆத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் உள்ளதா? என சோதனை செய்தனர்.

    மேலும் கடைகளில் இருந்த பிளாஸ்டிக் கவர்கள், காலாவதி யான தின்பண்டங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர்.

    பிளாஸ்டிக்கவர்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து மீண்டும் இவற்றை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

    • 12.5 கிலோ எடையிலான ரசாயன மீன்களை பறிமுதல் செய்து குழி தோண்டி அதில் கொட்டி அழித்தனர்.
    • கெட்டுப்போன மீன்களையோ விற்கக் கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து சென்றனர்.

    ஓசூர்,

    ஓசூர் பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் ஃபார்மலின் என்ற ரசாயனம் கலந்த மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிருஷ்ணகிரி மீன் துறை உதவி இயக்குனர் மற்றும் மீன்வள சார் ஆய்வாளர் ஆகியோருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

    இந்த புகார்களின் அடிப்படையில், நேற்று ஓசூர் மீன்வள சார் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் அதிகாரிகள் ஓசூர் பகுதிகளில் உள்ள பல்வேறு மீன் கடைகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது மீன் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல வகையான மீன்களை ஆய்வு செய்த அதிகாரிகள் அதனை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் அந்த நீரை ஃபார்மலின் கிட் மூலம் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின் போது ஃபார்மலின் ரசாயனம் கலந்து விற்பனை செய்ததாக 2 மீன் கடைகாரர்களை எச்சரித்த அதிகாரிகள், அவர்களிடமிருந்து 12.5 கிலோ எடையிலான ரசாயன மீன்களை பறிமுதல் செய்து குழி தோண்டி அதில் கொட்டி அழித்தனர்.

    ஓசூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மீன் கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள் மீன் வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் ரசாயனம் கலந்த மீன்களையோ அல்லது கெட்டுப்போன மீன்களையோ விற்கக் கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து சென்றனர்.

    • காலாவதியான பொருட்கள் பறிமுதல்
    • 2 கடைகளுக்கு நோட்டீஸ்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பார்சம்பேட்டை, சந்தைக்கோடியூர் பகுதியில் கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் வேலூர் ஒருங்கிணைந்த நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு) வி. செந்தில் குமார், நாட்றம்பள்ளி ஜோலார்பேட்டை ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் எம். பழனிசாமி ஆகியோர் கோடியூர், பார்சம்பேட்டை பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், ஹோட்டல்கள், இறைச்சி கடைகள் என 16 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது காலாவதியான 3 கிலோ உணவை பறிமுதல் செய்து அழித்தனர். இரண்டு ஹோட்டல்களில் கலர் பவுடர்கள் பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை ஒன்றில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருளை பறிமுதல் செய்து அந்த கடை உரிமையாளருக்கு 2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மேலும் கோடியூர் பகுதியில் இறைச்சி கடை ஒன்றில் பழைய இறைச்சி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ சிக்கன் இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

    உணவகம் மற்றும் இறைச்சி கடைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் பழைய உணவு மற்றும் இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளர்களுக்கு அறிவு றுத்தினர். உணவு பாதுகாப்பு சான்று இல்லாத கடைகள் நடத்துபவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொண்டு கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் மேலும் கடை பதிவு சான்று இல்லாமல் உள்ளவர்கள் உடனடியாக பதிவு சான்று பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • இந்த சோதனையின்போது 35 வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    விருதுநகர்

    சென்னை தொழிலாளர் துறை ஆணையர், அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் எடையளவு சட்டத்தின் கீழ் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 15 வியாபாரிகள் மீதும், எடையளவுகள் மறு முத்திரையிடப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத 17 வியாபாரிகள் மீதும், தராசின் எடையினை சரிபார்க்க வியாபாரிகள் வைத்திருக்க வேண்டிய சோதனை எடைக் கற்கள் வைத்திருக்காத 3 வியாபாரிகள் மீதும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறைச்சி மற்றும் மீன் கடைகளில் எடை அளவுகள் தொடர்பான சிறப்பாய்வு மீண்டும் வருகிற 25-ந் தேதி நடைபெறும். எனவே இறைச்சி மற்றும் மீன்கடை வியாபாரிகள் தங்களது எடை அளவுகளை தொழிலாளர் நலத்துறையின் முத்திைர ஆய்வாளரிடம் முத்திரையிட்டு பறிமுதல் மற்றும் வழக்கு நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்.

    நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார் தெரிவிக்க 04562-225130 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்), 1/13சி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.இந்த சிறப்பாய்வில் சிவகாசி தொழிலாளர் துணை ஆய்வாளர் முத்து மற்றும் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்களான தயாநிதி, உமாமகேசுவரன், செல்வராஜ். திருமதி.அ.பாத்திமா, துர்கா, முருகன், முருகவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    • காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள செல்போன் கடைக்கு தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளது.
    • மற்ற கடைகளை விட விலை குறைவாக வழங்குவதாகவும் பல்வேறு புகார் வந்ததது.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு சாலையில் பிரபல செல்போன் கடை. இயங்கி வருகிறது. இந்த செல்போன் கடைக்கு தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளது. இந்த செல்போன் கடையில் உரிய கணக்கு மற்றும் வரி செலுத்தாமல் செல்போன்களை விற்பதாகவும், மற்ற கடைகளை விட விலை குறைவாக வழங்குவதாகவும் பல்வேறு புகார் வந்ததது. 

    இதனை தொடர்ந்து புதுச்சேரி வணிகவரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர், கடையில் திடீரெ ன நுழைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத செல்போன் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் சுமார்6 மணி நேரத்துக்கு மேலாக சோதனை செய்து, சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள திருநள்ளாறு சாலை கடைவீதியில் வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பிரபல துணிக்கடையான கே. வி. டெக்ஸ் உள்ளது.
    • கே.வி.டெக்ஸ் உரிமையாளர் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் - சிதம்பரம் சாலையில் பிரபல துணிக்கடையான கே. வி. டெக்ஸ் உள்ளது. இந்த கே.வி. டெக்ஸ் துணிக்கடையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆடைகள் வாங்கி செல்வார்கள். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கே.வி. டெக்ஸ் கடையில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் துணிகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் கே.வி.டெக்ஸ் நிறுவனம் கடலூரில் முக்கிய சாலையாக உள்ள சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என குற்றச்சாட்டு வைத்து புகார் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் கே.வி.டெக்ஸில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருமானத்துறை சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடியாக உள்ளே சென்றனர். பின்னர் கடலூர் கே.வி.டெக்ஸில் ஆடைகள் எடுத்துக் கொண்டிருந்த பொதுமக்களை அவசர அவசரமாக வெளியேற்றினார்கள்‌. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமானவரித்துறையினர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் கே.வி.டெக்ஸ் நிர்வாகம் ஏதேனும் வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா? என தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஆடைகள் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள்? எத்தனை கோடிக்கு விற்பனை செய்து உள்ளார்கள்? இதில் அரசுக்கு சரியான முறையில் வரி செலுத்தி உள்ளார்களா? அல்லது வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை மேற்கொண்டதோடு கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள கே.வி.டெக்ஸ் உரிமையாளர் வீட்டில் 3 கார்களில் வந்த 7 அதிகாரிகள் அதிரடியாக உள்ளே சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுவை இந்திராகாந்தி சிலை அருகே கே.வி. டெக்ஸ் துணிக்கடை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை 11 மணியளவில் சென்னையில் இருந்து 8 வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வாடிக்கையாளர்களை வெளியேற்றி விட்டு ஊழியர்களிடம் இருந்த செல்போன்கள் உள்ளிட்டவைகளை வாங்கி வைத்துக்கொண்டு இந்த சோதனை நடைபெற்றது. சோதனையை தொடர்ந்து புதுவை கே.வி.டெக்ஸ் கடை முன்பு துப்பாக்கி ஏந்திய 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மற்றும் புதுவை கே.வி. டெக்ஸ் நிர்வாகத்தினரால் கட்டப்பட்ட கட்டிடம் சரியான முறையில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக கடலூரில் தமிழக அரசும், புதுவையில் புதுவை அரசும் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். பின்னர் அந்தந்த அரசிடம் உரிய அனுமதி பெற்று சட்டதிட்டத்திற்குள் கடை திறக்கப்பட்டு வியாபாரம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கே.வி.டெக்ஸ் நிர்வாகத்தினர் வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா? என வருமானவரித்துறையினர் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று விழுப் புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் வருமான வரி சோதனை நடந்தது.

    • தேனி மாவட்டம் போடி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.
    • புகையிலை விற்ற 7 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.

    அதன்பேரில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் தலைமையில் போடி வட்டார உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் சரண்யா அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    போடி மீனாட்சிபுரம், சிலமரத்துப்பட்டி, மீனாவிலக்கு ஆகிய பகுதிகளில் புகையிலை விற்ற 7 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    ×